districts

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை:  முதல்வர் தலையிட சிபிஎம் கோரிக்கை

கடலூர், நவ. 21- அரசு உதவி பெறும் பள்ளிகளில் அக்டோபர் மாத சம்பளத்தை பெறுவதில் குளறுபடி நிலவுகிறது. தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாக ரீதியாக மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மாற்றத்தால், அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள் அக்டோபர் மாத ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசாணை 151இன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மாற்றத்திற்கு உட்பட்ட அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. இந்த பிரச்சனையால் தமிழகமெங்கும் புதிய நிர்வாக மாற்றத்திற்கு உட்பட்ட பல்வேறு கல்வி மாவட்டத்தை சார்ந்த ஆசிரியர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து விரைவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கடந்த 17ஆம் தேதி  மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியி ருந்தார். இருப்பினும் இந்தப் பணிக்கு பயன்படுத்தி வரும்  மென்பொருள் பிரச்சனையால் தாமதம் ஏற்படுவதாக மாவட்டக் கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மென்பொருளை தவிர்த்து நேரடியாக ஊதியம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.